வணக்கம்

வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார் 
தெரி­வித்­­த­னர்.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர்.
“யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குடும்பப் பெண் காலை 8 மணியளவில் பேருந்துக்காக புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் இருந்த சிமெந்துக் கட்டு மேல் உட்கார்துள்ளார். 
அந்த வேளை அந்தப் பெண் இருந்த கட்டுக்கு நேர் எதிராக இருந்த ஒழுங்கையின் ஊடாக அவரின் மகன் மோட்டார் சைக்கிளில் முதன்மை வீதியில் வந்து ஏறியுள்ளார். முதன்மை வீதியால் பயணித்த  முச்சக்கர வண்டியும் அவரின் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு 
விபத்துக்குள்ளாகின.
விபத்தால் நிலைகுலைந்த முச்சக்கரவண்டி மதிலில் உட்காருந்திருந்த பெண்ணின் மீது மோதுண்டது.
விபத்தில்  படுகாயமடைந்த குடும்பப் பெண்  உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். 
எனினும் போதனா வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் மகனையும், முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்தனர்.
“விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் புதியது. அதற்கான இலக்கத்தகடுகூட வழங்கப்படவில்லை.மோட்டர் சைக்கிளைச் செலுத்தியவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை ” என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக