வணக்கம்

செவ்வாய், 19 ஜூலை, 2016

அணையாமல் 1,000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கோயில்!

உப்பிலிருந்து ஏ.ஸி வரை நம் வாழ்க்கையில் உபயோகிக்கும் பல பொருட்களில் டாடா என்ற பெயரும் கோத்ரேஜ் என்ற பெயரும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால், இதன் உரிமையாளர்கள்
 இந்தியர்கள் அல்ல.
இந்திய தேசிய காங்கிரஸை அமைத்தவர்களில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் இருவரும் ஆங்கிலேயர்கள். ஆனால் தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயரும் அல்ல இந்தியரும் அல்ல, அவர் ஒரு பார்ஸி.
ஜவஹர்லால் நேருவின் மருமகன் ஃபெரோஸ் காந்தி அவரும் இந்தியர் அல்ல. ஆனால், இவர்கள் நம் இந்திய அரசியல் பொருளாதாரத்தில் கலந்தவர்கள். இவர்கள் பார்ஸி இனத்தவர்கள். இவர்கள்
பாரசீகம் என்று வரலாற்றில் சொல்லப்படும் நாடான ஈரானிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வந்தவர்கள். ஈரான் நாட்டின் ஆதிகால மக்கள் பார்ஸி இன மக்கள்.
உலகின் பழைமையான இனங்களில் ஒன்று பார்ஸி. ஈராக் பகுதிகள். ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை ஜொராஷ்ட்ரியர்கள் என்றும் அழைக்கின்றனர். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், ஈரானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பார்ஸிகள் புலம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்த போது, நடந்ததாக சொல்லப்படும் சுவாரஸ்யமான கதை
 ஒன்று உண்டு.
அப்போது, குஜராத்தை ஆட்சி செய்த ஜாதவ் ரானா என்ற மன்னர், அவர்களுக்கு தனது தேசத்தில் புகலிடம் அளிக்க விரும்பவில்லை. ஈரானில் இருந்து அகதிகளாக வெளியேறி குஜராத்தை அடைந்த ஜொராஷ்ட்ரியர்கள், தஞ்சம் கேட்டு மன்னர் ஜாதவ் ரானாவுக்குத் தகவல் அனுப்பினர். அவர் ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்து அனுப்பி, இங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால் இங்கே இடம் இல்லை என்ற தகவலையும் 
அனுப்பினார்.
ஜொராஷ்ட்ரிய தலைவர், தனது பையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து அந்தப் பாலில் போட்டு மன்னருக்கே அதை அனுப்பிவைத்தார். பாலில் சர்க்கரை சேருவதற்கு நிச்சயம் இடம் இருக்கத்தானே செய்யும்!
இவர்களது ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு
 ஈரானில் பிறந்தவர்
 என்கின்றனர். இவர் தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரைச் சந்தித்து, தனது மதக்கோட்பாடுகளை அவருக்கு விளக்கி, மன்னரை தனது சமயத்துக்கு மாற்றினார். இதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக
 வளர்ந்து இருக்கிறது.
உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் ‘அஹூரா மாஜ்டா” என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே.
நன்மைதான் எப்போதும் வெல்லும் என்பதை மனிதன் உணர வேண்டும் என்பதையே ஜொராஷ்ட்ரியம் விளக்குகிறது. இந்த மதத்தின் புனித நூல் ‘அவஸ்தா’ என்று அழைக்கப்படுகிறது.
ஈரான் மக்கள் அனைவரையும் முஸ்லிமாக மாற்ற முயற்சி நடந்ததால்தான் இவர்கள் இந்தியா வந்தனர். இவர்களின் பழங்கால மத நம்பிக்கையைக் காப்பாற்ற, அங்கிருந்து தப்பித்து இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். 6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது 70,000 பார்சி மக்கள் உலகம் முழுக்க வசிக்கின்றனர். தொழில்துறை மற்றும் வியாபாரத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
“இந்தியாவில் பார்ஸிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அறப் பணி மற்றும் மனித நேயப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர்” என்று மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். பார்ஸி இன மக்களின் உழைப்பு, பம்பாய் நகரின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது.
தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த முக்கியமான பார்ஸியர்கள். இயற்பியல் வல்லுநர் ஹோமி பாபா, பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி, இசை இயக்குநர் ஜுபின் மேத்தா, இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா, தொழில் அதிபர்கள் டாட்டா, கோத்ரெஜ் மற்றும் வாடியா ஆகியோர் பார்ஸிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலம் முதல் தற்போது வரை மும்பையை வர்த்தக தலைநகராக உருவாக்கியதில் பார்சி மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
சரி, பார்ஸி மதம் என்ன சொல்கிறது?
பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே, இவர்களை ‘பார்ஸிகள்’ என்று அழைக்கின்றனர். புகலிடம் பெற்ற பார்ஸிகள் விவசாயிகளாகவும், நெசவாளிகளாகவும், தச்சுவேலை செய்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கையைத்தொடங்கினர்.
பார்ஸிகள் நெருப்பை வணங்கக் கூடியவர்கள். நெருப்பே அவர்களின் ஆதி தெய்வம் என்ற நம்பிக்கைகொண்டவர்கள். அவர்கள் எங்கே சென்றாலும் நெருப்பை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்புக்காக அவர்கள் குஜராத்தில் ஒரு கோயில் கட்டினர். அந்தக் கோயிலில் உள்ள நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. இன்று, உலகின் எந்த நாடுகளில் பார்ஸிகள் வசித்தாலும் ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்பின் ஒரு சுடரை தங்களுடன் எடுத்துச் சென்று அதையே வழிபடுகின்றனர்.
சென்னையிலும்கூட அக்னி கோயில் எனப்படும் பார்ஸிகளின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. இந்த அக்னி கோயிலின் நூற்றாண்டு விழா, கடந்த மாதம் நடந்தது. 1795-ம் ஆண்டில் பார்ஸி இனத்தவர் சென்னையில் காலடி வைத்தனர். சென்னையில் இன்று 300 பார்ஸி குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.
சென்னையில் நெருப்புக் கோயில் உருவாக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. அதாவது, சென்னையில் வாழ்ந்த பார்ஸியான பிரோஜ் கிளப்வாலா என்பவர், தனது மகன் இறந்தபோது சடங்கு செய்வதற்காக அக்னி கோயில் இல்லையே என வருந்தினர். தனது சொந்தப் பணத்தில் ஓர் இடத்தை வாங்கி அதில் நெருப்புக் கோயில் கட்டி, அதை பார்ஸி இன மக்களுக்கு அர்ப்பணம் செய்து இருக்கிறார்.
இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளாக நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுமட்டும்தான்! பொமி என்பவர் இதன் மதகுருவாக தற்போது இருக்கிறார்.
சூரத்தில், பார்ஸி இனத்தவரின் சில நெருப்பு கோயில்கள் உள்ளன. அவற்றில் பார்ஸி அகியாரி மிகவும் முக்கியமான கோயிலாகும். புனித தீபம் எரிந்து கொண்டிருக்கும் இந்த கோயிலில் பார்ஸி அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பார்ஸி இனத்தவர்கள் தங்கள் இனத்துக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்வார்கள். வேற்று மதத்தினரில் திருமணம் செய்து கொள்வதில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர். இவர்களது திருமணம் மற்றும் அது குறித்தான சடங்குகளை சூரியன் மறைந்த பிறகு, மகிழ்ச்சியான விழாவாக கொண்டாடுகிறார்கள். விருந்து கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் எல்லாவாற்றையும் சிறப்பாகக் கொண்டாடி மணமகன், மணமகளுக்கு மேற்கத்திய பாணியில் முத்தம் கொடுப்பதோடு விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
பார்ஸி இனத்தவர்களின் சமூகப் பழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று, அவர்கள் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதில்லை எரிப்பதுமில்லை. அமைதி கோபுரம் எனும் (டவர் ஆஃப் சைலன்ஸ் ) உயரமான வட்ட வடிவ கோபுரத்துக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச்சென்று கழுகு, காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு இரையாக்கி விடுகின்றனர். அதன் பின்னர் ஒரு வாரம் பத்து நாள் கழித்து அவரது எலும்புகளை எடுத்து வந்து மணலில் புதைத்து விடுகின்றனர்.
இறந்தவர்களுக்குரிய இந்த சடங்குகளைச் செய்யும் போதெல்லாம் அவர்களது நெருப்புக் கடவுளின் தீயை எடுத்துவைத்து, சந்தனப்பத்திகளின் வாசனைப் புகையுடன் இந்த சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.
குஜராத்திலும் ,மும்பையிலும், இந்த அமைதி கோபுரம் இருக்கின்றது. ஆனால், இப்போதெல்லாம் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதால் இந்த சடங்கை நிறைவேற்றுதில் சில சிரமங்களும் இருந்து வருகின்றன. இந்த வகை கழுகுகள் குறைந்து போனதுக்குக் காரணம் கால்நடைகளுக்கு வழங்கப்படும் ரசாயனம் கலக்கப்பட்ட தீவனங்கள் என்பதுதான் வேதனையான ஒரு உண்மை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக